தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகளுக்கு தடை கோரி மனு - தமிழ்நாடு காவல்துறை, பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவு!
மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை
அமர்வில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “பட்டியல்
சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரை கொண்ட குழுவும், மாநில அளவில் முதலமைச்சர், தமிழக காவல்துறை தலைவரை கொண்ட குழுவும் உள்ளது.
எஸ்.சி, எஸ்.டி பாதுகாப்பு குழுவானது கணக்கெடுப்புகளை நடத்துவது, சிறப்பு
காவல் படை தேவை எனில் அது குறித்து பரிந்துரை செய்வது, பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிப்பது, புலனாய்வு செய்வது, மாதவாரியாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும். தமிழக காவல்துறை தலைவரே இதற்கு தலைமையாக இருந்து இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால்
உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கு என சாதியக்கட்சி, அமைப்புகளை உருவாக்கி அரசியல் கட்சியினருடன் இணைத்துக் கொள்வது, இளைஞர்கள் youtube சேனல்களில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி பொது அமைதியை குலைக்கும் வகையில் சாதிய வெறுப்பு பேச்சுக்களை பேசுவது என பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆகவே தமிழ்நாட்டில் எஸ்.சி, எஸ்.டி பாதுகாப்பு குழு தமிழக காவல்துறை தலைவர் தலைமையில் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்தவும், வெறுப்புணர்வை தூண்டும் அனைத்து சாதிய கட்சிகள் மற்றும் youtube சேனல்களுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத மற்றும் போட்டியிடாத சாதிய கட்சிகள், சங்க விதிகளை மீறி செயல்படும் அனைத்து சாதிச் சங்கங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு,
“வழக்கு தொடர்பாக தமிழக ஆதி திராவிட நலத்துறையின் செயலர், தமிழக காவல்துறை தலைவர், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.