“பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்களுக்கு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க. பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு, ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையை கடைப்பிடித்து வருபவர். கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர். இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம். பா.ஜ.க.வை வீழ்த்தக் கூடிய இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கிய பங்கு உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தல் யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல். கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காமல் இறுதிக்காலத்தில் ஒரு கோவிலை கட்டி பா.ஜ.க. தலைமை மக்களை திசைதிருப்ப பார்க்கிறது. தேர்தலைச் சந்திக்கும் பா.ஜ.க.வுக்கு தங்கள் சாதனைகளை மக்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதனால் முழுவதுமாக கட்டி முடிக்காத கோவிலை அவசரமாக திறந்து சாதித்துவிட்டதாக காட்டுகின்றனர். இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.