PBKS vs LSG | லக்னோ அணி பவுலர்களுக்கு தண்ணி காட்டிய பிரப்சிம்ரன் சிங்... பஞ்சாப் அசத்தல் வெற்றி!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தர்மஷாலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி லக்னோவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரியான்ஷ் ஆர்யா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங்குடன் ஜோஷ் இங்கிலிஸ் கைகோர்த்தார். ரன்களை குவித்துக்கொண்டிருந்த ஜோஷ் இங்கிலிஸ் எதிர்பாராத விதமாக 30 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களில் அவுட் ஆனார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்பு வந்த நேஹல் வதேரா 16 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் 33 ரன்களுடனும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். லக்னோ அணியில் அதிகபட்சமாக ஆகாஷ் சிங் மற்றும் திக்வேஷ் ரதி தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். தொடர்ந்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் கண்டது.
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமலும், எய்டன் மார்க்ரம் 13 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து இறங்கிய நிக்கோலஸ் பூரன் 6 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பந்த் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் ஆயுஷ் பதோனி அணியின் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்தார். மறுபக்கம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 74 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.