ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் - சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!
ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண், விழா மேடையில் தனது அண்ணனான நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று (ஜூன் 11) நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபுநாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டணி கட்சிகளின் சார்பில் சந்திரபாபு நாயுடு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும், ஆந்திர ஆளுநர் நசீர் அகமதிடம் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, மற்றும் தெலுங்குதேசம், ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் கொண்டு போய் கொடுத்தனர். சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுக்கும்படி இவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த பதவியேற்பு விழாவிற்கு விஜயவாடா விமான நிலையம் அருகே உள்ள கேசரபள்ளி எனும் இடத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து, பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதோடு, பிரதமர் மோடியிடம் வாழ்த்துக்களை பெற்றார். பின்னர் மேடையில் பவன் கல்யானின் அண்ணனும், நடிகருமான சிரஞ்சீவியிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார் பவன் கல்யாண்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர்கள் ரஜினி காந்த், சிரஞ்சீவி மற்றும் பல அரசியல், சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.