விசிக-வுக்கு கிடைத்தது பானை சின்னம்....! தேர்தல் அதிகாரிகள் உத்தரவு!
மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
இந்நிலையில், ஏற்கனவே வேட்புமனு தாக்கல் நிறைவுற்ற நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதற்கிடையே ஏற்கனவே தேர்தல் பரப்புரை தகிக்கும் வெயிலுக்கு இடையில் பரபரவென நடந்து வரும் நிலையில் சில கட்சிகள் மட்டும் எந்த சின்னத்தில் ஓட்டு கேட்பது என்று தெரியாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சின்னம் ஒதுக்கப்படாமல் நீதிமன்றம் வரை சென்று போராடிக்கொண்டிருந்தன. இதில் மதிமுகவுக்கு அதன் பழைய சின்னமான பம்பரம் தரப்படாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதனால் மாற்றுச்சின்னம் கேட்டு மதிமுக காத்திருந்தது. அதே நேரத்தில் விசிக தங்களது பானை சின்னத்தை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று நீதிப்போராட்டம் நடத்தி வந்தது. இதனிடையே மாநில கட்சி அந்தஸ்து பெறாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கான சின்னம் இன்று இறுதிச் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்து.
அதன்படி விசிக எந்த சின்னம் கேட்டு சட்டப்போராட்டம் நடத்தியதோ அந்த பானை சின்னமே அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற தேர்தலில் விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
இதே போன்று மதிமுகவுக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்று தெரியாமல் அக்கட்சியினர் தவித்து வந்தனர். ஏற்கனவே பம்பரம் சின்னம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததால், தீப்பெட்டி சின்னம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.