மக்களவைத் தேர்தல் - அதிமுக விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவு!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில்அதிமுக சார்பில், 40 தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த பிப். 21 ஆம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பிப். 21 முதல் இன்று வரை மொத்தம் 10 நாட்கள் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிவரை விருப்ப மனு விநியோகம் முடிவடைகிறது. இதுவரை மொத்தம் 1500க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக அதிமுக தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.