பாகிஸ்தான் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது - மத்திய அரசு நோட்டீஸ்!
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் இந்திய கிராமங்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்த நிலையில் தொடர்ந்து போர் பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள் கேட்டுக்கொண்டதுக்கிணங்க தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக இருநாடுகளும் தெரிவித்தனர். இதனிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என இந்தியா அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "Ubuy இந்தியா, Etsy, The Flag Company மற்றும் The Flag Corporation ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்ட நோட்டீசில், பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது பொறுத்துக்கொள்ளப்படாது என்று ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அத்தகைய பொருட்களை தங்கள் தளங்களில் இருந்து அகற்றுமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.