பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் மோடி கடும் கண்டனம்!
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் இன்று(ஏப்ரல்.22) சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் சுப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தோருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களுக்கு பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கூறினார். மேலும் இச்சம்பவம் குறித்து சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி பேசியதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இந்த கொடூரமான செயலுக்குப் பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்... அவர்கள் தப்பவிட முடியாது. அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதி அசைக்க முடியாதது, அது இன்னும் வலுவடையும்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.