“அதிமுகவில் இணைய ஓபிஎஸ் இதை செய்ய வேண்டும்” - ராஜன் செல்லப்பா முன்வைத்த நிபந்தனை!
மதுரை மேலூர் அருகே உள்ள திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டியில்,
“அதிமுகவிற்கு வலிமையான எதிர்காலம் 2026ம் ஆண்டு உள்ளது. அதிமுக இரட்டை தலைமையாக இருந்த போதும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஒற்றை தலைமையில் புதிய உச்சத்தை தொட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வகையில், எங்களுடைய பயணங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
அதிமுகவில் எந்தவித நிபந்தனையும் இன்றி இணைய ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, “அவருடைய செல்வாக்கு நன்றாக இருந்திருக்குமானால் பாஜகவே அவரை கட்சியில் இணைத்திருக்கும். தற்போது செல்வாக்கை இழந்துள்ள ஓபிஎஸ் ஆறு மாத காலம் அதிமுகவிற்கு எந்தவித இடையூறும் செய்யாமல், அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்.
வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை ஓபிஎஸ் போன்றோர் தொடர்ந்து அதிமுகவுக்கு கொடுத்து வருகின்றனர். அது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. மூத்த உறுப்பினர்கள் இதுபோன்று செயல்படுவது அழகல்ல” எனவும் தெரிவித்தார்.