வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமிய மதத்தில் இறை பணிகளுக்காக அளிக்கப்படும் அசையும், அசையா சொத்துகள் மற்றும் நன்கொடைகளை வக்ஃபு என்பார்கள். இந்த வக்ஃபு சொத்துக்கள் நிர்வாகம் செய்வதற்கு 1954 ஆம் ஆண்டு வக்ஃபு வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை ஒழுங்குபடுத்த 1995, 2013 ம் ஆண்டுகளில் வஃக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வக்ஃபு வாரிய சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டுவர மக்களவையில் இதற்கான மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவில் பாஜக கூட்டணியை சேர்ந்த 16 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர். கூட்டுக்குழு சார்பில் பலமுறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று, ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன.

தொடர்ந்து கூட்டுக் குழுவினர் கடந்த ஜனவரியில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், வக்ஃபு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்கள் செய்யப்பட்ட 655 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை கடந்த பிப்வரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் (ஏப்.2) நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மாநிலங்களவையில் நிறைவேறியது.
இதற்கிடையே, வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒரு பகுதியாக சென்னை பனையூரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டத்தால் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.