காதலுக்கு எதிர்ப்பு : காவல் நிலையத்தின் வெளியே இளம் ஜோடியை இழுத்து போட்டு சராமாரியாக தாக்கிய குடும்பத்தினர்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானூத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
அய்யர்சாமி - கவினாஸ்ரீ. இளங்கலை பட்டதாரிகளான இருவரும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே பக்கத்து வீட்டுக்காரர்களான இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று காலை அய்யர்சாமி - கவினாஸ்ரீ இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், இரு வீட்டாரையும் அழைத்து பேசி, காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன் கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.,
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு
வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கிய சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து காவலர்கள் நேரில் வந்து இரு வீட்டாரையும் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடு ரோட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடியை அவர்களின்
குடும்பத்தினரே தாக்கிய சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது.