'லக்பதி திதி' திட்டத்தால் லட்சாதிபதியான 1 கோடி பெண்கள் – நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
"லக்பதி திதி" திட்டத்தால் 1 பெண்கள் லட்சாதிபதியானதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லக்பதி திதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் லக்பதி திதி திட்டத்தின் கீழ் லட்சாதிபதி ஆனார்கள். லக்பதி திதி திட்டத்தின் கீழ் இந்தியாவில் சுமார் 2 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு வைத்துள்ளதாகவும், இந்த இலக்கை 3 கோடியாக உயர்த்துவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
‘லக்பதி திதி’ திட்டம் என்றால் என்ன?
கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் ‘லக்பதி திதி’ திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிளம்பிங், எல்இடி பல்ப் தயாரித்தல் மற்றும் ஆளில்லா விமானங்களை இயக்குதல் மற்றும் பழுது பார்த்தல் போன்ற திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார். அதன் படி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே "லக்பதி திதி" திட்டம் ஆகும்.