மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து... ஒருவர் உயிரிழப்பு!
சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் 42 பேர் பயணம் செய்தனர். நாகர்கோயிலை சேர்ந்த ராஜா என்பவர் பேருந்தை ஓட்டினார். பேருந்தானது இன்று அதிகாலை மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகாபுரம் ஒத்தக்கடை அருகே சென்று
கொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் 12 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி, மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, மின் வயர்கள் பேருந்து மீது அறுந்து விழுந்ததில் பேருந்து மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி
தீயை அணைத்தனர். விபத்தில் பேருந்து முழுமையாக
எரிந்து நாசமானது.
விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார். உயிரிழந்தவர் கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிலையை சேர்ந்த புஷ்பம் (62) என்பது தெரியவந்தது. துவரங்குறிச்சி போலீசார் வழக்கு
பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.