'வடசென்னை வளர்ச்சி திட்டம்' - ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு!
வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், இதன்மூலம் வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.
இந்த உரையில், வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும். மேலும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். சென்னை பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகள் மேம்படுத்தப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.