For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் செய்ய கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
01:29 PM Mar 09, 2025 IST | Web Editor
 இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்    முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

Advertisement

அப்போது மும்மொழிக்கொள்கை, நிதிப்பகிர்வு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்,

"மக்களவை தொகுதிகளை பாதுகாக்கும் முதல்வரின் முயற்சியில் துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்.

தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைத்து செயல்படுவோம்" என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டத்தில் பேசுகையில்,

"நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சிக் கூட்டம் இந்தியா முழுக்க கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படவுள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும், முதலமைச்சர்களுக்கும் நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா நம் சார்பில் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்த கருத்தை விளக்க வேண்டும். தொகுதி மறுவரையறை பிரச்சினையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம்தான். நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றியடையும் வரை இந்த போராட்டமும் முன்னெடுப்பும் தொடர வேண்டும்.

தொகுதி மறுவரையறை, நிதிப்பகிர்வு, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தி மொழித் திணிப்பின் தொடர்ச்சியாக நம்மை பாஜக அரசு வஞ்சிக்கிறது. இவற்றில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும்.

தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. எனவே திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும்.

உடனடியாக டெல்லியில் தமிழ்நாட்டு எம்பிக்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளையும் கேட்டு செயலாற்றிட வேண்டும். மும்மொழிக் கொள்கை பிரச்சினையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோட வைக்க வேண்டும். இந்தித் திணிப்பைத்தான் நாம் எதிர்க்குறோமே தவிர இந்தி மொழியையோ, அந்த மக்களையோ இல்லை. அதனால், இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.

எங்கள் மாநிலத்தில் இருமொழிக் கொள்கை மூலமாக அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள் - உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் சென்று பெரிய பொறுப்புகளில் இருப்பதை கவனியுங்கள் என அவர்களும் நம் தரப்பு நியாயத்தை புரிந்துகொள்ளும் வகையில் பேச வேண்டும். இந்தி படிக்கச் வில்லை என்றல் நிதி தர மாட்டோம் என்று கூறுவது சர்வாதிகாரம் இல்லையா? என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் போது அனைத்து திமுக எம்பிக்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காவும் திமுக எம்பிக்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement