“இனி வேண்டாம் போர்கள்” - ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஈரான் மீது தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேலின் வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பொறுப்பற்ற ஆக்கிரமிப்புச் செயலாகும். இந்த தாக்குதல் ஒரு பரந்த போரை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. காசா மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் பாலஸ்தீன குடிமக்களின் துன்பங்களுடன் இணைந்து, இந்த வன்முறைப் பாதை கண்டிக்கப்பட வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும் இதை கட்டுப்படுத்தவும், நீதிக்கும், சமரச பேச்சுவார்த்தைக்கும் வலியுறுத்த வேண்டும். இனி வேண்டாம் போர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 6 அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட 78 பேர் இறந்தனர்; 320 பேர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.