பட்டோடி டிராபி இல்லை... இனி டெண்டுல்கர் - ஆண்டர்சன் டிராபி!
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டிகள் பார்டர் கவாஸ்கர் டிராபி என அழைக்கப்படுகின்றன. அதேபோல், இந்தியா- இங்கிலாந்து அணிக்கும் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக இரு அணிகளுக்குமான டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்தில் விளையாடும்போது பட்டோடி டிராபி என்றும், இந்தியாவில் விளையாடும்போது அந்தோனி டீ மெல்லோ டிராபி என்றும் அழைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இரு நாட்டு அணிகளின் ஜாம்பவான்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், சச்சின் டெண்டுல்கரை கௌரவிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது (ஜூன்.11) இந்தப் பெயரை சச்சினும், ஆண்டர்சனும் இணைந்து அறிவிக்க உள்ளதாக கிரிகின்ஃபோ தெரிவித்துள்ளது. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான 2025- 2027 சுழற்சியில் இந்தியாவும் இங்கிலாந்தும் முதல்முறையாக மோதவிருக்கின்றன.
5 போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றன. ஷுப்மன் கில் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்படுகிறார்.