"எந்த அமைச்சரும் தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை" - அமைச்சர் முத்துசாமி பேட்டி !
ஈரோட்டில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு கேட்பது மட்டும் முக்கிய நோக்கமல்ல, மக்களின் பிரச்சினையை கேட்பது மிக முக்கியம். தொகுதி முழுவதும் நடந்து சென்று மக்களை சந்திப்பது என முடிவு செய்து மொத்தம் 33 வார்டுகளில், 30 வார்டு மக்களை சந்தித்துள்ளோம்.
தேர்தலை பயன்படுத்திய மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த தேர்தலில் வெளியூர் அமைச்சர்கள் வேண்டாம், உள்ளூர் கட்சிக்காரர்களை வைத்து வேலை செய்ய திமுக தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்பதால் நாங்கள் வேலை செய்து வருகிறோம்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் கேட்பவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம் நேரில் பார்த்தால் தான் அருமை புரியும். காலை உணவு திட்டத்தை பற்றி குற்றம் சொல்பவர்கள் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும். இந்த திட்டம் வயிற்றை நிரப்புவதற்காக அல்ல குழந்தைகளின் எதிர்காலத்தில் சிறந்த குடிமகனாக கொண்டு வருவதற்கு. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் தேர்தலுக்காகவும், அரசியலுக்காக என நினைத்தால் அப்படித்தான் இருக்கும். அதனை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுவிலக்கு துறை பார்க்க வேண்டிய கடமையுள்ளது. மற்ற அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் வரப்போவதில்லை. எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை. இந்தியா கூட்டணி சரியாது அப்படியே இருக்கும். சீமான் மட்டுமல்ல யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அனைவரையும் நியாயமான மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.