எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது - சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,154 கோடி குறித்தும், தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு மொழிக் கொள்கையை மீறுகிறதா? எனவும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, புதிய தேசிய கல்விக்கொள்கை திட்டத்தின் கீழ் உள்ள பலன்களை நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலைகளில் வாழக்கூடிய குழந்தைகளும் பெறுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்புகளில் தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் பிராந்திய மொழி என்பதன் கீழ் செயல்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் தமிழக பள்ளிகளில் தமிழ் ஒரு மொழி பாடமாக இருப்பதை மத்திய அரசு ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2023-2024ம் நிதியாண்டில் சமக்ர சிக்ஷா அபியான் கீழ் மொத்தம் நான்கு தவணைகளாக 1876.15 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதாகவும், 2024-2025 நிதியாண்டுக்கான 4305.66 கோடி ரூபாய் வழங்க திட்ட ஒப்புதல் வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ திட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவோம் என்பதில் உறுதியாக உள்ளதோடு, எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்பதையும் மத்திய கல்வி இணை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்