பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு
நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் இந்தியா கூட்டணியல் 35 தொகுதிகளிலேயே வெற்றி பெற முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டியிட்ட சூழலில் 85 இடங்களில் வென்றது.
கடந்த 2020 போலவே இந்த முறையும் நிதிஷ்குமாரே முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், மீண்டும் வரும் இன்று (நவ.20) முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். இதன் மூலம் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் 10-வது முறையாக பதவியேற்க உள்ளார்.
அவரது பதவியேற்பு விழா பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணி முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் பங்கேற்பதால் காந்தி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.