For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாசாவுடன் இணைந்து அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

07:12 PM Feb 17, 2024 IST | Web Editor
நாசாவுடன் இணைந்து அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும்   இஸ்ரோ தலைவர் சோம்நாத்
Advertisement

இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Advertisement

வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அந்தவகையில், அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. அது, ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.17) மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதற்காக 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று (16.02.2024) மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளைத் துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.

இதற்கு முன்பு இஸ்ரோ சாா்பில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இன்சாட்-3டி மற்றும் 3 டிஆர் திட்டங்களின் தொடா்ச்சியாக தற்போது இன்சாட்-3டிஎஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடர்ந்து, திட்டமிட்டபடி இன்று (17.02.2024) மாலை 5.35 மணி அளவில் இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதனை அடுத்து அடுத்தடுத்த கட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்,

"இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்சாட் 3டிஎஸ் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு புதிய தலைமுறை செயற்கைக்கோள். வானிலை தொடர்பான பல்வேறு தரவுகளை புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக உடனுக்குடன் தரக்கூடிய திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள்.

செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் சரியான முறையில் இயங்குகின்றன. செயற்கைக்கோள் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. ஜிஎஸ்எல்வி 14, இன்சாட் 3டிஎஸ் மற்றும் செயற்கைக்கோளில் உள்ள பேலோட் எனப்படும் தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பை தயாரித்த அனைவருக்கும் பாராட்டுகள். ஜிஎஸ்எல்வியின் அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement