"பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யப் போவதில்லை என பரவும் செய்தி" - பாமக மறுப்பு!
பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யப் போவதில்லை என கோவை மாவட்ட பாமக பெயரில் வெளியான செய்திக்கு கோவை மாவட்ட பாமக மறுப்பு தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் கோவையில் தேர்தல் பணிகளில் இருந்து மனவருத்தத்துடன் வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..
கோவை தொகுதி வேட்பாளர் பாமக அலுவலகத்துக்கு இதுவரை வரவில்லை. அதேபோல வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவை அழைக்கவில்லை. ஆறு தொகுதிகளில் இரண்டு தொகுதிக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது.
கோவை தொகுதி வேட்பாளரின் வேட்பு மனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை. தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கும் பாமகவை அழைக்கவில்லை. எந்த ஒரு பிரச்சாரத்திற்கும் இதுவரை அழைப்பு வரவில்லை. அதேபோல தேர்தல் வாக்குறுதி வெளியிட்டு நிகழ்ச்சிக்கு பாமகவுக்கு அழைப்பில்லை.
கூட்டணி தர்மம் முக்கியம் தான் அதைவிட சுயமரியாதை முக்கியம். கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை,ஏறக்குறைய அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுமே மிகுந்த மனவருத்தத்தில் தான் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மௌனமாய் வெளியேறுகிறோம். “ என்கிற செய்தி வெளியானது.
“ நான் கோவை ராஜ் என்கிற ராஜகோபால், நான் சொன்னதாக சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் வரும் செய்திகள் தவறானவை என்றும், வாட்ஸ்அப் தகவல் வைத்து அதை செய்தியாக்கி வெளியிட்டு உள்ளனர் என்றும் NDA கூட்டணி சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கோவை பாமக முழு மூச்சுடன் களப்பணி செய்யும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.