நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி - மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை!
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் முடங்கியிருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.
கடந்த மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் பெய்த கனமழையால் தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மின்சாரம், குடிநீர் என எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். தற்போது, வெள்ளம் வடிய தொடங்கி மக்களின் நிலை மெதுவாக சீராகி வருகிறது. பேருந்துகள், ரயில் போக்குவரத்து தடைபட்ட பகுதிகளுக்கு மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட மலை கிராமங்களில் சாலைகள் உருக்குலைந்து போன நிலையில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்து. இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இப்பகுதிகளுக்கு போக்குவரத்து சேவை தொடங்கபடவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த போக்குவரத்து முடக்கம் குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக அம்பாசமுத்திரத்தில் இருந்து இந்த மலை கிராமங்களுக்கு பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.