நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு நெற்றியில் பந்து பட்டு காயம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 நாடுகள் கலந்து கொள்ளும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்துள்ளது. இந்த போட்டி நேற்று தொடங்கி பிப்.14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.
பின்னர் 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 252 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.
போட்டியின் 38-வது ஓவரில், பாகிஸ்தான் இடதுகை வீரர் குஷ்தில் ஷா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க ரச்சின் முயன்றார். அப்போது, மைதானத்தில் இருந்த ஒளி அவரது கண்களை மறைத்ததால். அவரால் கேட்ச் பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது, பந்து அவரது முகத்தில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.