மதுரையில் புதிய கிரிக்கெட் மைதானம் - எம்.எஸ்.தோனி இன்று திறந்து வைக்கிறார்!
மதுரையில் கட்டப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ்.தோனி இன்று திறந்து வைக்கிறார். மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமம் சார்பாக 2023 ஆம் ஆண்டு புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 11.25 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பயிற்சி ஆடுகளங்கள், இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை வசதி உள்ளிட்டவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 20 ஆயிரம் இருக்கைகள், 500 கார்களை நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மைதானத்தை போல் மழை பெய்தாலும் விரைவாக மீண்டும் போட்டியை தொடங்கும் வகையில் வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சுற்றி 5 அடியளவில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து இந்த மைதானத்தின் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மைதானத்தின் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய ஸ்டேடியமாக இது அமைந்திருக்கிறது. ஏற்கனவே சென்னை மற்றும் கோவையில் டிஎன்பிஎல் உள்ளிட்ட தொடர் போட்டிகள் நடந்து வருகின்றன.
இனி மதுரையில் டிஎன்பிஎல், ரஞ்சி டிராபு, புச்சி பாபு கிரிக்கெட் தொடர் ஆகியவை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 நிமிடங்களில் மைதானத்திற்கு வர முடியும். அதேபோல் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு அருகிலேயே பிரம்மாண்ட ஹோட்டலும் உள்ளது, இதனால் மைதானத்திற்கு வருவதற்கு கால தாமதம் ஏற்படாது என கூறப்படுகிறது.