Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!
சிவகங்கை மாவட்டம் செம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் புகலீஸ்வரன், நாகஜோதி தம்பதியர். இவர்களுக்கு திலக் தர்ஷன், ராகுல் தர்ஷன் என இரு மகன்கள் உள்ளனர். புகலீஸ்வரன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் மகன்களான திலக் தர்ஷன் பி.காம் பயின்று வருவதுடன் ராகுல் தர்ஷன் சிவகங்கையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் 12 ஆம் வகுப்பை கடந்த வருடம் முடித்து மதுரையில் தங்கி நீட் கோச்சிங் செண்டரில் பயின்று வந்துள்ளார்.
நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் காரியாபட்டியில் தன்னுடைய பெரியப்பாவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசாமி இல்லத்தில் தங்கி இருந்துள்ளார். இதனிடையே நேற்று நீட் தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ராகுல் தர்ஷன் பதட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 13ம் தேதி இரவு மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் ராகுல் தர்ஷன் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரர் உடனடியாக உறவினர்களை அழைத்து அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராகுல் தர்ஷன் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு ராகுல் தர்ஷனின் உடல் சொந்த ஊரான செம்பனூர் கொண்டுவரப்பட்டது. இதனை கண்ட அவரது உறவினர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.