"ரூ.16 ஆயிரம் கோடியில் தேசிய கனிமங்கள் திட்டம்" - மத்திய அரசு ஒப்புதல் !
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ரூ.16 ஆயிரத்து 300 கோடி மதிப்புள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, "என்சிஎம்எம் திட்டம் ரூ.16,300 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் உள்ளநாட்டிலும், கடற்பகுதியிலும் உள்ள முக்கிய கனிமங்களை கண்டறிவதை ஊக்குவிக்கும்.
மேலும், முக்கிய கனிமங்களின் தேவைக்காக வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும், சுயசார்பு உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த திட்டம் பெரிதும் உதவும். கனிம ஆய்வு, சுரங்கம், மூலப்பொருளை மேம்படுத்தும் செயலாக்கம் என மதிப்பு சங்கிலியின் அனைத்து நிலைகளையும் இந்த என்சிஎம்எம் திட்டம் உள்ளடக்கும்.
முக்கிய கனிம சுரங்கத் திட்டங்களுக்கு விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறையை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, கனிம ஆய்வுகளுக்கான நிதி ஊக்குவிப்பை வழங்குவதுடன், கடினமான பாறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கனிம வளங்களை மீட்டெடுப்பதை இந்த திட்டம் உறுதிசெய்யும்" என்று தெரிவித்துள்ளார்.