நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா! 8,000 விருந்தினர்கள், 7 வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு! பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் 8,000 விருந்தினர்கள், 7 வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதில் பாஜக மட்டும் 240 இடங்களை பெற்ற நிலையில், ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பெறாத நிலை ஏற்பட்டது. இதனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு நாளை (ஜூன் 9) மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அரசு நாளை இரவு 7:15 மணிக்கு (09-06.2024) பதவியேற்க உள்ளது. அப்போது பிரதமர் மற்றும் மத்திய மந்திரி சபையின் மற்ற உறுப்பினர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்த விழாவுக்கு தொழிலாளர்கள், மத்திய அரசு திட்டங்களில் பலன் பெறுவோர், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
அதேபோல், புதிய பாராளுமன்ற வளாகம் உள்ளிட்ட "சென்ட்ரல் விஸ்டா" திட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களால் பலன் பெற்றவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் மொத்தமாக 8000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமல்லாது, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுகொண்டார். மாலத்தீவைத் தவிர, அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை, பூட்டான், நேபாளம், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் பதவியேற்பு விழாவை காணுவதோடு கொண்டாட்டங்களிலும் ஈடுபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.