என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இதற்கிடையே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜோதிராமன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர்: அதிகளவில் மக்கள் போக்குவரத்து இருக்கும் பகுதி என்பதாலும், குறுகிய சாலை என்பதால் இருபக்கமும் மறைக்கும் நிலை வரும் எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்க வேண்டும். வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை இதனை செய்திருக்கலாம். எங்களுக்கு அது குறித்து தெரியவில்லை. ஒட்டுமொத்த மக்களும் கூடிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளனர். ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமிபுரத்தில் நடத்தும் நிலை வந்தது. மனுதாரர்கள் மீது பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஜாமின் வழங்கக்கூடியவையே. மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் குற்றம் செய்யவில்லை, காவல்துறையே தவறிவிட்டது.
நீதிபதி: உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையையே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும் போது அதற்கான பொறுப்பு வேண்டும் தானே?
அரசுத்தரப்பு வழக்கறிஞர்: இது முன் ஜாமின் வழக்கே. மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை என கூறுகிறார்கள். 304 (A) பிரிவிலேயே வழக்கு பதியப்பட்டுள்ளது. சிலர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 105 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு காரணமானவர் யார் என கண்டறிய விசாரணை அவசியம். அது தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது. மனுதாரர்கள் இருவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இரவு 7 மணிக்கு துயர சம்பவம் நிகழ்ந்தது. கட்சியினரால் தான் அவர்களின் தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலும். அது போன்ற அறிவிப்பை அவர்கள் செய்யவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர் நீரிழப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. தலைமறைமாவது ஏற்கத்தக்கதல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். கேரவனில் 4 மூலைகளிலும் சிசிடிவி இருக்கும். அவற்றை வழங்க வேண்டும். விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன் ஜாமின் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே முன் ஜாமின் வழங்கக்கூடாது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன், முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.