"என் இதயம் உடைந்து நொறுங்கி உள்ளது" - ராகுல் காந்தி!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பள்ளி குழந்தைகள் உணவருந்தும் வீடியோ ஒன்றை பதிவிட்டு எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் செய்தித்தாள்களை தரையில் விரித்து அதில் பள்ளி குழந்தைளுக்கு மதிய உணவு பரிமாறப்படும் வீடியோ காட்சியை கண்டேன். அந்த நேரம் முதல் என் இதயம் உடைந்து நொறுங்கி போய் உள்ளது. இதுபோன்ற பரிதாபகரமான நிலையில் நாட்டின் எதிர்காலத்தை வளர்ப்பதற்காக நாட்டின் பிரதமரும், முதலமைச்சரும் வெட்கப்பட வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தை தாங்கியிருக்கும் இந்த அப்பாவி குழந்தைகளின் கண்ணியம் காப்பதற்காக அவர்களுக்கு ஒரு தட்டு கூட கிடைக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலான அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசாங்கம் அந்த குழந்தைகளுக்கு சென்று சேர வேண்டிய தட்டுகளைக் கூட திருடிவிட்டனர்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.