"இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள்" - ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டி!
மதுரை மாவட்டம் அம்மா திடலில் நாளை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் முருகனின் அறுபடை வீடுகள் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான முருக பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்து முன்னணி சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில மாநாடு நடத்தப்படும். கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இதற்கு முன்பு மாநில மாநாடு நடத்தப்பட்டது.
கடைசியாக 2018ல் பல்லடத்தில் நடைபெற்றது. மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதுரை வந்த தமிழக ஆளுநர் ரவி முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறுபடை வீடுகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார். ஒவ்வொரு ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக சென்று சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறுபடை வீடு மாதிரி அமைப்பை பார்வையிட்டார். அவருக்கு சிவாச்சாரியார் பூரண கும்ப மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழக ஆளுநர் அறுபடை முருகனுக்கு தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "சிவபெருமானின் மகன் முருகன் அவர் நமக்கானவர். முருகன் நமக்கான அடையாளம். நான் ஆறு அறுபடை வீடுகளுக்கும் சென்றுள்ளேன். ஆனால் அந்த ஆறு அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அறுபடை வீடுகளிலும் இங்கு தரிசனம் செய்தேன்.
இதனை முன்னெடுத்துள்ள இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள். முருகன் நம் கலாச்சாரத்திற்கான கடவுள். இது நமது கலாச்சார அடையாளம். இது தான் நமது பாரதம். முருகனின் அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டும் என்பது நமது கனவு. ஒருநாள் இது பலிக்கும் என்றார்.