முருக பக்தர்கள் மாநாடு விவகாரம் - நிபந்தனையுடன் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து வழிபட மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி!
இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் முருகன் பக்தர்கள் மாநாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பக்தியை வளர்க்க ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த வளாகத்திற்குள், முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது.
அதில் வருகிற 10 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து உள்ளனர். அதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 6ந் தேதி நடைபெற்றபோது நீதிபதி புகழேந்தி, அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று கருத்து கூறி ஒத்திவைத்தார். இதனிடையே அனைத்து சாதி அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தலைவர் அரங்கநாதன் மற்றும் ராமலிங்கம் சார்பில், முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க தடை விதிக்கக்கோரி, இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முருகன் அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி கோரிய விசாரணை இன்று(ஜூன்.13) நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “மத நிகழ்வுகளில் அரசியல் கலக்கக்கூடாது கூடாது” என்ற நிபந்தனையுடன் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து காலை, மாலை வழிபாடு செய்து பிரசாதம் வழங்க அனுமதி வழங்கி உத்தவிட்டார்.