For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் – வி.கே.சசிகலா  கண்டனம்

04:57 PM Jan 25, 2024 IST | Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் – வி கே சசிகலா  கண்டனம்
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு வி.கே.சசிகலா  கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: ” நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்குதல் : சிகிச்சைக்கான முழு செலவை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீதான தாக்குதலுக்கு வி.கே.சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

"திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைளையும் எடுத்து தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.   கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பத்திரிக்கையாளர் நேச பிரபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பினை உடனே அளிக்க வேண்டும்.

இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொண்டு, குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement