அம்பானி குடும்ப திருமண முன்வைபவம்: 3 நாட்கள் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண முன்வைபவம் குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் 1,000 பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளை காணலாம்...
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதியரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியான ராதிகா மெர்செண்டுக்கும் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில், கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு நேற்றுடன் (மார்ச் 3) நிறைவு பெற்றது.
ஏற்கனவே மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்த முகேஷ் அம்பானி, தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தையும் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்.
சுமார் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் ‘வந்தாரா' என்ற புதிய வனத்தை அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின.
முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது. இரண்டாம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மூன்றாம் நாளான நேற்று வந்தாராவனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நடிகர் ரஜினி காந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் நேற்று (மார்ச் 3) ஜாம்நகருக்கு சென்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், அலியா பட், ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப், இயக்குநர் அட்லி உட்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஜாம்நகரில் குவிந்தது.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உட்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர். மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா உட்பட வெளிநாட்டு பிரபலங்களும் இந்தியாவை சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் என மொத்தம் 1,000 சிறப்புவிருந்தினர்கள் 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் காலை, மதியம், இரவு வேளைகளில் பரிமாறப்பட்டன. உணவுக்காக மட்டும் சுமார் ரூ.130 கோடி செலவிடப்பட்டது. விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஒரே மேடையில் நடனமாடியது, முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் அழகிய நடனம், புதுமண தம்பதி ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் நடனம், தோனி, இவாங்கா ட்ரம்பின் தாண்டியா நடனம், ரிஹானாவின் பாடல் என சமூக வலைதளங்கள் முழுவதும் அம்பானி இல்ல திருமண முன்வைபவ நிகழ்ச்சிகள் நிறைந்துள்ளன. இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் திருமண முன்வைபவ நிகழ்ச்சிகள் ஈர்த்துள்ளன.
ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள்நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளது. திருமண முன்வைபவமே இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள திருமண விழா பிரம்மாண்டத்துக்கே சவால் விடுக்கும் வகையில் இருக்கும் என்று அம்பானி குழும வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.