“இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்கின்றனர்” - அமைச்சர் மெய்ய நாதன் பெருமிதம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சீர் மரவினர் நலவாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், சிவ. வீ. மெய்ய நாதன், தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், எம்எல்ஏ தங்கப்பாண்டியன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2,184 பயனாளிகளுக்கு ரூ. 21.42 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டங்களை அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் பேசும்போது, “விளிம்பு நிலை மக்களை உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல், சட்ட வல்லுநர், கால்நடை மருத்துவம், வேளாண் அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு மேல் படிப்புகளில் தமிழ்நாட்டில் இருந்து 40,611 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இது போன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இவர்களுக்கான கல்வி கட்டணம் ரூ. 911 கோடியை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி உள்ளார். இது விளிம்பு நிலை மக்களை உயர்த்தும் திட்டமாக பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.