வெறி நாய்கள் கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - நாய்களை பிடிக்க திணறும் வத்திராயிருப்பு பேரூராட்சி நிர்வாகம்!
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வெறி நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசும் தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தும் வெறி நாய்கள் தொல்லை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.
இந்த சூழலில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி
பகுதியில் கடந்த 2 தினங்களாக வெறி நாய் ஒன்று சுமார் 40க்கும் மேற்பட்டோரை
கடித்துள்ளது .காயம் அடைந்தவர்கள் வத்திராயிருப்பு, விருதுநகர், மதுரையில்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெறி நாயை இன்னும் பிடிக்க முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
பொதுமக்கள், மாடு மற்றும் கன்று குட்டியையும் வெறிநாய் கடித்ததில்
ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள் கூமாபட்டி பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெறி நாய் சுற்றி திரிவதால் கூமாப்பட்டி கிராமம் முழுவதும் பொதுமக்கள் அச்சத்தில் கையில் கம்புடன் சுத்தி வருகின்றனர். வெறி நாய் கடியின் காரணமாக ஒரு சில பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனே வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.