சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!
சேலம் மாவட்டம் சங்ககிரி நகராட்சிக்குட்பட்ட ஓ.ராமசாமி நகர், பவானி பிரதான சாலை, மத்தாளிகாலனி, பழைய எடப்பாடி சாலை, நகராட்சி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து சென்றவர்கள், நின்று கொண்டிருந்தவர்கள் என 20க்கும் மேற்பட்ட நபர்களை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்து கொண்டே சென்றுள்ளது.
இதில் காயமடைந்த நகராட்சி துப்பரவு மேற்பார்வையாளர் அழகேசன் (55), விஜயகுமார் (47), குமார் (57), ஸ்ரீனிவாசன் (55) உள்ளிட்ட பலர் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தலைமை மருத்துவ அலுவலர் சரவணகுமார் தலைமையிலான மருத்துவர்கள் காயமைடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
தலைமை மருத்துவர் நாய் கடியால் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறை ஓதுக்கீடு செய்து கண்காணித்து வருவதோடு, அரசு மருத்துவமனையில் 496 நாய்கடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இத்தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையாளர் எஸ்.சிவரஞ்சனி, வட்டாட்சியர் வாசுகி ஆகியோர் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். ஒரே நேரத்தில் ஒரு வெறி நாய் பலரை கடித்தததால் சங்ககிரி நகராட்சிக்குட்பட்ட
பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தெரு நாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.