மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய அவர்,
உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை : காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மாநில அளவிலான முதன்மை புற்றுநோய் மையமாக அறிவிக்கப்பட்டது. இதனை தரம் உயர்த்தி, 800 படுக்கைகளுடன் கூடிய தன்னாட்சி பெற்ற மையமாகச் செயல்படும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 120 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
நவீன புற்றுநோய் கண்டறியும் கருவி : நவீன முறையில் புற்றுநோயைக் கண்டறியும் வகையில் இடைநிலை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குத் தேவையான நவீன மருத்துவக் கருவிகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கிட அரசு திட்டமிட்டுள்ளது.
கருப்பை வாய் புற்றுநோய் : கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும் தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிட HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நடமாடும் மருத்துவக் குழுக்கள்: நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம், முக்கிய புற்றுநோய்கள் மற்றும் இருதய நோய் ஆகியவற்றைக் கண்டறிவதற்கான சோதனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிட 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இல்லம் தேடி மருத்துவம்: இதுவரை 2 கோடியே 20 லட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கான முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியதற்காக ஐ.நா. அமைப்பின் 2024 ஆண்டிற்கான 'United Nation Interagency Task Force Award' என்ற விருது தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கியுள்ளது.
இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48: சாலை விடத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திடும் நோக்கில் நாட்டிற்கே முன்னோடியாகத் தொடங்கப்பட்ட 'இன்னுயிர் காப்போம் திட்டம்’ மற்றும் ’நம்மைக் காக்கும் 48’ என்னும் திட்டத்தின் கீழ், 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகள் மூலம் இதுவரை 34,3156 நபர்களுக்கு 302 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் இன்னுயிர் காக்கப்பட்டுள்ளது.
விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: தேசிய நலவாழ்வுக் குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 2,754 கோடி ரூபாயும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 1,092 கோடி ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,461 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 348 கோடி ரூபாயும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக மொத்தம் 21 ஆயிரத்து 906 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது". இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.