தமிழ்நாட்டின் சாதனைகளை மறைத்து நாடாளுமன்றத்தில் தவறான தகவல் - மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பெரியசாமி பதில்!
வேளாண்மைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணி நிமித்தமாக இரண்டு முறை தமிழ்நாடு சென்ற போதும், தமிழ்நாடு அமைச்சர்கள் என்னை பார்க்க வரவில்லை என மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் பெரியசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
“தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்கு வந்த போது தனது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். அவருக்கு சில தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை.
இந்தியாவிலேயே மத்திய ஊரக வளர்ச்சித் திட்டங்களில் தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது. MGNREGS-கீழ் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் மத்திய அரசினால் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை 2,839 கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கும், எங்கள் மாநில நிதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நேரில் வலியுறுத்தியதற்கும் பதில் என்ன?
இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் . அவர் தமிழ்நாடு வந்தபோது, குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். ஆனாலும் அவருடன் தொலைபேசியில் உரையாடி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவர் ஏனோ மறந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது.
துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசியதையும் கூட அறிவார். இது தவிர, காணொலி வாயிலான ஆய்வுக்கூட்டங்களிலும் நான் அவருடன் கலந்துகொண்டுள்ளேன். இருப்பினும் தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்தப்பணிக்காகத் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் போல பேசியுள்ளது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல!
இந்த கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுட்டெரிக்கும் வெயிலில் தங்களது உடல் உழைப்பை தந்து விட்டு ஊதியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள பாக்கியை வழங்குவதில் இதே ஆர்வத்தை அவர் காட்டியிருந்தால் நாம் பாராட்டியிருப்போம்” என பதிவிட்டுள்ளார்.