For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வங்கக்கடலில் உருவானது மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்பு!

07:14 AM Nov 28, 2023 IST | Web Editor
வங்கக்கடலில் உருவானது மிக்ஜாம் புயல்  தமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்பு
Advertisement

தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது தீவிரமடைந்து புயலாக மாறும் என்றும், இந்தப் புயலுக்கு ‘மிக்ஜாம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக். 21-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போதும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக் கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக் கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழ்நாட்டின் ஊடாகச் செல்வதால் வடதமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவாலாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துக் கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நேற்று புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம், வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் வியாழக்கிழமை (நவ. 29) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இந்தப் புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரை செய்த ‘மிக்ஜாம்’ என்ற பெயர் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழ்நாட்டிற்கு வருமா அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா என்பது இன்னும் இரண்டு நாள்களில் துல்லியமாகத் தெரியவரும் என்று சென்னை வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement