For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் நடை மீண்டும் திறப்பு - கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை!

09:31 AM Mar 22, 2024 IST | Web Editor
மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் நடை மீண்டும் திறப்பு   கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை
Advertisement

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு இன்று கோயில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்றது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில்
100 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் உள்ளது.  கடந்த ஆண்டு இந்த கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது.  இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து,  பூட்டி சீல் வைக்கப்பட்ட தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  தர்மராஜா திரெளபதி அம்மன்
கோயிலை திறந்து பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் ஒரு கால பூஜை மட்டும் நடத்த வேண்டும் என்றும்,  இதில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால்
மறுபடியும் கோயிலை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மாவட்ட
நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி,  மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றும் நடவடிக்கையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.  அப்போது சீலை அகற்றி கோயிலின் பிரதான நுழைவு வாயில் கதவினை வருவாய் துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.  இதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையால் புதியதாக நியமிக்கப்பட்ட அர்ச்சர்கர் மற்றும் உதவியாளர் ஒருவர் என இருவர் மட்டுமே கோயிலுக்குள் சென்று கோயிலை சுத்தம் செய்து அதன்பிறகு தர்மராஜா திரெளபதி அம்மனுக்கு பூஜை செய்தனர்.

அப்போது கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.  அதன்பிறகு கோயில் கதவுகள் மூடி பூட்டப்பட்டது.  இதேபோல் தினந்தோறும் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஒரு கால பூஜை மட்டும் நடத்தப்பட்ட பிறகு மீண்டும் கோயில்
மூடப்படும் என்றும் பொதுமக்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரு சமுதாய
மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்ட கோயில் மீண்டும் இன்று
திறக்கப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தலைமையில் 300க்கும் மேற்பட்ட
போலீசார் மேல்பாதி கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திரெளபதி அம்மன் கோயிலை சுற்றிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு கோயிலுக்குள் பொதுமக்கள் யாரும் சென்றுவிடாமல் தடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த தர்மராஜா திரெளபதி
அம்மன் கோயில் 9 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜை
நடத்தப்பட்டிருப்பது அப்பகுதி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்,
கோயிலுக்குள் சென்று அம்மனை வழிபட முடியவில்லையே என்ற வருத்தத்தையும்
ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மேல்பாதி கிராம நுழைவு வாயிலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.  இதனால் செய்தி சேகரிக்க முடியாமல் கடும் அதிருப்தி அடைந்த செய்தியாளர்கள் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் அமீதுவின் வாகனத்தை முற்றுகையிட்டு வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் அமீதுவிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
Advertisement