For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையை அச்சுறுத்தும் மீலியாய்டோசிஸ் தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை!

09:47 AM Dec 18, 2023 IST | Web Editor
சென்னையை அச்சுறுத்தும் மீலியாய்டோசிஸ் தொற்று   மருத்துவர்கள் எச்சரிக்கை
Advertisement

சென்னையில் 'மீலியாய்டோசிஸ்' தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மழைக் காலங்களில் மண்ணிலிருந்து பரவும் 'மீலியாய்டோசிஸ்' எனப்படும் அரிய வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது;

"பெரு வெள்ளம் போன்ற பேரிடர் சூழலுக்குப் பிறகு 'மீலியாய்டோசிஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று உருவெடுக்கத் தொடங்குகிறது. இது விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஒரு சேர பரவுகிறது.

மண்ணுக்குள் பல வகையான பாக்டீரியாக்கள் வியாபித்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று 'பர்கோல்டெரியா ஸ்யூடோமேய்' எனப்படும் நுண்ணுயிரி. அதன் மூலமாகத்தான் 'மீலியாய்டோசிஸ்' தொற்று பரவுகிறது. மேலும், உரிய விழிப்புணர்வு இல்லாமல் சிகிச்சையை புறக்கணித்தால் அந்தத் தொற்று முக்கிய உறுப்புகளை செயலிழக்கச் செய்து உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.

கால்களிலோ, உடலிலோ காயங்கள் இருப்பவர்கள் மாசடைந்த நீரில் நடக்கும் போதும், தரமற்ற குடிநீரை அருந்தும் போதும் 'மீலியாய்டோசிஸ்' தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போன்று அந்த பாக்டீரியாக்கள் பரவியுள்ள காற்றை சுவாசிக்கும்போதும் அந்நோய் ஏற்படலாம்.

ஒருவரது உடலில் பாக்டீரியா கிருமி ஊடுருவிய இரண்டாவது வாரத்திலிருந்து அதன் அறிகுறிகள் தென்படும். அந்த வகையில், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் அண்மையில் பெய்த பெரு மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் தற்போது 'மீலியாய்டோசிஸ்' தொற்று பரவ காரணமாக உள்ளது" என மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து பொது நல மருத்துவ நிபுணர் அ.ப. ஃபரூக் அப்துல்லா கூறியதாவது;
"எந்த இடத்தில் பெரு வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்பட்டாலும் அங்கு பொது சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மாசடைந்த நீருடன் மனிதர்களும், விலங்குகளும் நேரடியாக தொடர்பில் இருப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

அதில் ஒன்றுதான் நாம் அதிகம் கேள்விப்படாத 'மீலியாய்டோசிஸ்' என்ற தொற்று. கொரோனா காலத்தில் கருப்புப் பூஞ்சை எனும் 'மியூகார் மைகோசிஸ்' தொற்று பரவியதைப் போன்று, தற்போது 'மீலியாய்டோசிஸ்' தொற்று அதிகமானோருக்கு பரவி வருகிறது.

இந்த பாக்டீரியாக்கள் உடலில் நீண்ட காலம் நிலைத்திருந்து நோய்களை உருவாக்கக் கூடியவை. முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், எலும்புகள், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதற்கான சிகிச்சையை புறக்கணித்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களுக்கு ஏற்படும் புண்களில் இருந்து வெளியேறும் சீழ், திரவம், ரத்தம் மற்றும் சிறுநீரிலும் நோய்க் கிருமிகள் காணப்படும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக பரவாது என்றாலும், நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் விரைந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பாதிப்பை முழுமையாக குறைக்க முடியும்.

எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள், தலசீமியா நோயாளிகள், புற்றுநோயாளிகள், ஹெச்ஐவி நோயாளிகள், நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு 'மீலியாய்டோசிஸ்' தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என பொது நல மருத்துவ நிபுணர் அ.ப. ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

Tags :
Advertisement