ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
தென்மேற்கு ஜப்பானின் கடற்கரையில் மருத்துவ போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில், நோயாளி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மூன்று பேர் மீட்கப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நாகசாகி மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு வயதான நோயாளியை ஏற்றிச் சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இதைத்தொடர்ந்து இரண்டு கடலோர காவல்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் மருத்துவர், நோயாளி மற்றும் பராமரிப்பாளர் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் விமானி, உதவியாளர் மற்றும் செவிலியர் ஆகிய 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
காப்பாற்றப்பட்ட மூவருக்கும் ஹைபோதெர்மியா எனும் உடல் வெப்பநிலை குறைபாடு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.