ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டி - குஜராத் வீரர் இஷாந்துக்கு அபராதம் விதிப்பு!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஹைதராபாத்தில் நேற்று (ஏப்.6) நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் அடித்தது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 31 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே குஜராத் வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
சுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இறுதியில் குஜராத் அணி 16.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக 61 ரன்கள் அடித்த சுப்மன் கில்லும், 35 ரன்களுடனும் ஷெர்பேன் ரூதர்போர்டும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியதாக கூறி குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.