“மனிதனால் உருவாக்கப்பட்ட ஏஐ மனிதனின் நுண்ணறிவைவிட ஒருபோதும் பெரியதல்ல” - ஸ்ரீதர் வேம்பு!
கிராமப்புறங்களில் பீடி சுற்றும் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் இந்தியாவில் முதல் கிராமப்புற மின் வணிகத் தளமானது ‘கொற்றவை’ என்கிற பெயரில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
சோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்த இந்த வணிக தளம் மூலம் பீடி சுற்றும் பெண்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வணிக தளத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இந்த திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் பெண்களை தொழில் முனைவோர்களாக ஆக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சோஹோ நிறுவனத்தின் மூலம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பதற்கான திட்டமிடுதல் உள்ளதாகவும், குறிப்பாக, தற்போது மின்காந்த பொருட்களின் தேவை இந்தியாவிற்கு அதிக அளவில் உள்ளதால் ஜப்பானில் பிளாஸ்டிக் மற்றும் ஒரு உலோகத்தை வைத்து புதிய மின்காந்தம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய சோகோ நிறுவனத்தின் மூலம் ஜப்பான் செல்ல உள்ளதாகவும், அதன் மூலம் இங்கு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளதாகும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் AI என்கின்ற செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கலாம் எனவும், வேலை இழப்பு என்பது ஒரு சில பகுதியில் இருந்தாலும் அதன் பயன்கள் அதிகம் எனவும் தெரிவித்தார்.
மேலும், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மனிதனின் நுண்ணறிவை விட ஒரு போதும் பெரியதல்ல என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.