சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை ஏழாம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயிலில் ரூபாய் 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று மிகப்பழமையான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
இதனிடையே கோயிலில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் மகா பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து கும்பக்கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கலசங்கள் விமான தளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
தொடர்ந்து விமான கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் அபிஷேகமாகி, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.