மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
மதுரை கூடல் அழகர் கோயில் 108 வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக விளங்குகிறது. இத்திருக் கோயிலில் உள்ளூர், வெளியூர் என ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் வரும் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இதையொட்டி தெற்குமாசி வீதி சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிந்தா கோஷங்கள் முழங்க காலை 6.20 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
தேரடியில் இருந்து கிளம்பிய தேர் பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக செல்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு நேதாஜி ரோடு, பெரியார் பேருந்து நிலையம், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேர்திருவிழாவை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.