மதுரை ஐடிஐ மாணவர் ராகிங் கொடுமை - 3 மாணவர்கள் இடைநீக்கம்..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவனை சக மாணவர்கள் சேர்ந்து நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், செக்காணூரணி காவல் நிலைய போலீசார் மூன்று மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மூன்று மாணவர்களையும் இடைநீக்கம் செய்து அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முதல்வர் அசோகன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதற்கு முன் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியதில்லை என்றும்,பாதிக்கப்பட்ட மாணவனும் அவர் தந்தை மூலம் தற்போது தான் புகார் அளித்த நிலையில் தந்தையின் புகாரின் அடிப்படையில் சக மாணவர்கள் மூவரை இடைநீக்கம் செய்துள்ளதாக முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை நடவடிக்கையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார்.