For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Madurai | “இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை.. எழுதி வைக்கப்படவே இல்லை..” - தொல்லியல் துறை இயக்குநர் பேட்டி!

05:54 PM Sep 21, 2024 IST | Web Editor
 madurai   “இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை   எழுதி வைக்கப்படவே இல்லை  ”   தொல்லியல் துறை இயக்குநர் பேட்டி
Advertisement

இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை எனவும் அவை எழுதி வைக்கப்படவே இல்லை எனவும், கல்வெட்டாகவோ, ஓலைச்சுவடிகளாகவோ உருவாக்கி இருக்க வேண்டும் எனவும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டு வரலாற்று பேரவையின் 31வது மாநாடு மதுரை பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 2வது நாளான இன்று (செப். 21) இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“சிலை வழிபாடு என்பது கி.பி.3ம் நூற்றாண்டுக்கு பிறகு வந்தது. அதற்கு முன்னால் இருந்த நாகரிகம் என்பதால் கீழடியில் சிலைகள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படியே அங்கு கிடைத்தாலும் அது கி.பி.3-ம் நூற்றாண்டுக்கு பிந்தைய காலமாக தான் இருக்கும். சங்ககாலத்தில் பெண் தெய்வ வழிபாட்டு முறை, இயற்கை வழிபாட்டு முறை தான் இருந்தது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என தெரிவித்தார்.

அமர்நாத் ராமகிருஷ்ணனிடம், தமிழை விட தொன்மையான மொழி உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ் தான் பழமையான மொழி என்பது எழுத்து கிடைத்தால் தான் நாம் உறுதி செய்ய முடியும். தமிழ் மொழிக்கான எழுத்துக்கள் கிடைப்பதால் தமிழ் மொழியை சொல்கிறோம். அதை வைத்து நாம் கி.மு.600 என்று சொல்கிறோம். ஆனால் எழுத்து என்பது மொழி தோன்றி நீண்ட காலத்திற்குப் பிறகு வருவது தான்.தமிழ் மொழிக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் இருந்துள்ளது. அங்கு ஒரு மொழி இருந்துள்ளது. ஆனால் அதுவும் தமிழின் ஆதி மொழியாகத்தான் இருந்திருக்கும். தமிழ் வளர்வதற்கான முதல் கட்ட மொழியாக அது இருந்திருக்கும். அதிலிருந்து தான் தமிழ் மொழியும், அதற்கான எழுத்துக்களும் வந்து அதை இந்தியா முழுவதும் பயன்படுத்தி இருப்பதாக சொல்கிறோம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, மகாபாரதத்தில் இருந்த பொருட்கள் கிடைத்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமர்நாத், “அது மகாபாரதத்தின் போது கிடைத்த தேர் அல்ல. சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பிற்காலத்தில் செப்பு காலத்தில் கிடைத்த ஆதாரம். ஆரியர்கள் காலமாக இருக்காது. ஏனென்றால் ஆரியர்களுக்கு புதைக்கும் பழக்கம் இல்லை. அவர்களுக்கு முன்பான காலமாகத்தான் இருக்கும். அது ஒரு சமாதி தான் தேரை வைத்து சமாதி கட்டியிருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

நதிகள் பெயரை வைத்து குறிப்பிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “அது கங்கை சமவெளியில் தான் கிடைக்கும். ஹரியானா பகுதியில் கூட கிடைக்காது. தற்போது பெயர் என்னவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முன்னால் எப்படி அழைக்கப்பட்டது என்பது தான் முக்கியம். இன்று மாற்றி வைத்துக் கொண்டால் அது வரலாற்றில் மாறிவிடாது. ஆரியர்களுக்கு முன்பாக தான் இந்த பூர்வீக மக்கள் இருந்திருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

திருமலை நாயக்கர் இறப்பு குறித்த கேள்விக்கு, “தற்போது உள்ள திருமலை நாயக்கர் மஹால் ஒரு பகுதி தான். ஆனால் தற்போது அங்கு அகழாய்வு மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை. பல கட்டடங்கள் அதிகமாகிவிட்டன. நம்முடைய முன்னேற்றத்தில் சில வரலாற்றுச் சின்னங்களை அழித்து விடுகிறோம். அதை அழியாமல் காப்பாற்றினால் அது வரலாற்றுச் சான்றுகளாக பிற்காலத்தில் இருக்கும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, நிறைய மன்னர்களின் வரலாறுகள் குறித்த கேள்விக்கு, “இந்தியாவில் வரலாறு சரியாக எழுதி வைக்கப்படவில்லை. எந்த மன்னர்களும் வாழ்ந்து மறைந்ததற்கான சான்றுகள் இல்லை. கிடைக்கின்ற சான்றுகளை வைத்து நாம் சொல்கிறோம். மேற்கத்தியவர்கள் ஒரு மன்னரின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக எழுதி வைத்துள்ளார்கள். நமது சான்றுகள் அளிக்கப்படவில்லை. எழுதி வைக்கப்படவில்லை. கல்வெட்டாகவோ, ஓலைச்சுவடிகளாகவோ உருவாக்கி இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

கீழடி ஆராய்ச்சி குறித்த கேள்விக்கு, “கீழடி மதுரையாக இருக்கலாம் அவ்வளவுதான். பணம் அதற்கான ஆதாரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. தற்போது உள்ள கீழடியில் தான் மதுரை இருந்ததாக திருவிளையாடல் புராணம் விளக்குகிறது. மதுரையை சுற்றி தான் தொல்லியல் துறை இடங்கள் நிறைய உள்ளன. ஆற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். மதுரை பழமையான இடம் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் மதுரையை சுற்றியுள்ள இடங்களில்தான் மதுரை பழமையானது என ஆதாரங்கள் உள்ளன” என தெரிவித்தார்.

காவிரி படுகைகளில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்வது குறித்த கேள்விக்கு, “தொல்லியல் துறையில் அனைவரும் ஆர்வத்துடன் ஆய்வு மேற்கொண்டால் தான் செய்ய முடியும். தனி ஒரு நபரால் செய்கின்ற வேலை இல்லை. வைகை ஒரு சிறிய நதி என்பதால் எளிதாக கள ஆய்வு செய்து விட்டோம். காவிரியை முழுமையாக கர்நாடகாவில் இருந்து கள ஆய்வு செய்ய வேண்டும். சமணப் படுகைகளை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என நாங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement