மதுரை : குடிபோதையில் இளைஞர் படுகொலை - 3 பேர் கைது!
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்த அஜய் பிரசன்ன குமார்(வயது 24) என்பவர் மீது காவல் நிலையத்தில் சுமார் 12 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று காலை தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இது குறித்து மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அஜய் பிரசன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில், 12ம் தேதி நள்ளிரவு ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழக்கடை சுந்தர் என்பவரது வீட்டில் அஜய் பிரசன்னா மற்றும் சிலர் குடிபோதையில் அவரது வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பழக்கடை சுந்தர் (38) தனது சகோதரர் சுந்தர்ராஜன் (36) மற்றும் பாண்டியராஜன் (26) உள்ளிட்டோர் சேர்ந்து அஜய் பிரசன்னாவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய கம்பிகளை கைப்பற்றி மூன்று பேரையும் கரிமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.